Pages

Monday 27 January 2014

சம்ப்ரதாயங்கள் - காலங்களை கடந்த ஒரு பார்வை - 2


இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை பற்றி ஆராய்ந்த போது கிடைத்த காரணங்கள் பல்வேறாகவும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால் பொதுவாக தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. 

தீபாவளி ஐந்து நாள் விழாவாக சொல்லப்பட்டு இருக்கிறது. முதல் நாள் தனத்ரயோதசி (Dhanatrayodashi - தனலக்ஷ்மியை வணங்கும் நாள்), இரண்டாம் நாள் நரக சதுர்தசி (Naraka Chaturdasi or Choti Diwali - சிறிய தீபாவளி - நரகாசுரனை வதம் செய்த நாள்), மூன்றாம் நாள் தீபாவளி நாள் (Lakshmi Puja - லக்ஷ்மி பூஜை), நான்காம் நாள் கார்த்திக சுத்த பத்யாமி (Karthika suddha Padyami). வாமணரால் பாதாளதிற்கு அழுத்தப்பட்ட அரசன் பாலி, வருடம் ஒரு முறை பூமிக்கு வரும் நாள். இதே நாள் பத்வா (Padwa - கணவன் மனைவி இடையே உள்ள அன்பையும் பற்றையும்) கொண்டாடும் நாள், ஐந்தாம் நாள் பாய் துஜ் (Bhai dooj - சகோதர சகோதரி அன்பை) கொண்டாடும் நாள்.

மேலே கூறிய காரணங்கள் மட்டும் இன்றி, ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணனோடு அயோத்திக்கு திரும்பி வந்த நாள் என்று சொல்லப் படுகிறது. பாண்டவர்கள் பதிமூன்று வருடங்கள் (வனவாசம் மற்றும் அஞ்ஞான வாசம்) முடிந்து திரும்பிய நாள் என்றும் நம்பப்படுகிறது. பாற்கடலை கடைந்த போது லக்ஷ்மி பிறந்த நாளை தீபாவளியின் ஆரம்ப நாளாகவும் சொல்லப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தில், தீபாவளி ராவணனை, ராமர் வெற்றி கண்டு அயோத்தி திரும்பியதற்காக கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவை பொருத்தமட்டில் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தில் நரகாசுரனை சத்யபாமா வதம் செய்ததற்காகவும், பாலி சக்ரவர்த்தியை வீட்டிற்க்கு அழைப்பதற்காகவும் கொண்டாடப் படுகிறது. இன்னும் நிறைய காரணங்கள் தீபாவளிக்காக சொல்லப் படுகிறது.

ஐந்து நாள், ஐந்து காரணங்களுகாக வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி தென்மாநிலங்களில் நரகாசுரனை கொன்றதற்காக மட்டும் கொண்டாடப்படுகிறது. சிறிய தீபாவளியாக வடமாநிலங்களில் கொண்டாடப்படும் நரகாசுர வதம் முக்கிய தீபாவளியாக தென்மாநிலங்களில் கொண்டாடப்படும் காரணம் தெரியவில்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவை ஆட்சி செய்ததாக கூறப்படும் நரகாசுரனின் வாரிசுகள் காமரூபம் என்று அழைகப்பட்ட இன்றைய அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்தனர். தெற்கு கௌஹாத்தியில் நரகாசுரனின் பெயரில் ஒரு மலையும் உள்ளது.

இந்த சரித்திரத்திற்க்கு எந்த வகையிலும் சம்பந்தபடுத்த முடியாத தென் மாநிலங்களில் நரகாசுர வதம் தீபாவளியாக கொண்டாடப் பட வேண்டிய அவசியத்தை இன்றைய இளைய சமுதாயம் எற்றுக் கொள்ள மறுக்கிறது. அதுபோல தீபங்களின் திருநாள் என்று சொல்லப்படும் தீபாவளி அன்று விளக்குகளை ஏற்றாமல் கார்த்திகை தீபம் அன்று வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றும் தீபத்திருநாளாக கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. மேலும் நகரங்களில் மட்டும் தீபாவளி முக்கிய பண்டிகையாகவும் கிராமங்களில் பொங்கல் முக்கிய பண்டிகையாகவும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கான காரணங்களில் இவ்வளவு வேறுபாடு இருக்கும் போது அன்று பின்பற்றப்படும் சம்ப்ரதாயங்களை கணக்கிட முடியவில்லை. தீபாவளி திருவிழாவில் மட்டும் பின்பற்ற படும் சம்ப்ரதாயங்களை பற்றி முழுமையாக எழுதுவது இயலாத காரியம்.

தீபாவளி கொண்டாடப்படும் காரணம் இடத்திற்கு இடம், மொழிக்கு மொழி மாறுபடுவதால் அதன் மூலமாக பின்பற்றப் படும் சம்ப்ரதாயங்களின் உள்ள வித்தியாசங்களையும் அதனுடைய மூல காரணங்களையும் ஆராய்ந்து பார்த்து எப்படி அறிய முடியும்?.

பண்டிகை மற்றும் விழாக்கள் ஒரு சமூகத்திற்க்கு நிச்சயம் தேவை. இன்றைய கால கட்டத்தில், ஒரு பண்டிகையின் அல்லது சம்ப்ரதாயங்களின் காரணத்தை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இதைப் பற்றிய சமூக அக்கறை இல்லாமல் பண்டிகைகளை கொண்டாடுவதாலும் அதை ஒட்டிய சம்ப்ரதாயங்களை பின் பற்றுவதாலும் நம் சரித்திர வழி சுவடுகளை நாமே இழக்க நேரிடுகிறது.

சரித்திரம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த சொத்து. அதை நம் சந்ததியர்களுக்கு சரியாக கொண்டு செல்வது நம்முடைய கடமை. காரணத்தை தொலைத்துவிட்டு, காரியங்களை மட்டும் பின் பற்றுவதால் காலப்போக்கில் குழப்பங்கள் அதிகமாகி எது தேவை, எது அல்ல என்று தெரியாமல் நல்லவற்றை இழந்து, அல்லாதவற்றை பின்பற்றும் அவலம் ஏற்படும். ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.

பார்வை தொடரும்.............

Sunday 19 January 2014

சம்ப்ரதாயங்கள் – காலங்களை கடந்த ஒரு பார்வை

சம்ப்ரதாயங்கள் பற்றி நேர்மையாக புரிந்து கொள்ள செய்யப்பட்ட முயற்சியே  “சம்ப்ரதாயங்கள் – காலங்களை கடந்த ஒரு பார்வை”. 
 
ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது, இவை இரண்டில் ஒன்றை செய்வதற்க்கு முன் நன்றாக புரிந்து கொண்டு முடிவெடுப்பது நலமாகும்.
 
சம்ப்ரதாயங்கள், இன்றைய சூழ்நிலையில், அனுபவ (பழைய) தலைமுறைக்கும், புதிய தலைமுறைக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. கட்டாயப்படுத்தி செய்ய படுவதாலும், முறையான விளக்கம் சொல்ல படாததாலும் இவற்றை பின் பற்ற இளைய தலைமுறை விரும்புவதில்லை.

சம்ப்ரதாயங்கள் என்பது ஒரு “செய்முறை விளக்கம்” (Standard Operating Procedure (SOP)).  இது அந்தந்த காலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்ப நடத்தப்படும் சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள், பண்டிகைகள் ஆகியவற்றை நடத்தும் வழிமுறைகளே சம்ப்ரதாயங்களாக மாறின. ஒவ்வொரு சம்ப்ரதாயத்துக்கும் ஒரு சிறப்பான காரணம் இருந்தது. 

நிகழ்ச்சிகள் நன்றாகவும், சிக்கல்கள் இல்லாமலும் நடைபெறவும் இந்த சம்ப்ரதாயங்கள் பெரிதும் உதவின. இந்த செய்முறை விளக்கங்கள் அனைவருக்கும் நல்ல வழி முறையாக இருந்ததால் அனைவராலும் கடைப் பிடிக்கப்பட்டு தலைமுறை, தலைமுறையாக பின்பற்றப் பட்டது.

சம்ப்ரதாயங்கள் சரி அல்லது தவறு என்பதை விட அந்தந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உதவியாக இருந்தது. அடுத்து வந்த காலங்களில் தேவைகளுக்கு ஏற்ப சம்ப்ரதாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு இன்றும் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன.

முந்தய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் சம்ப்ரதாயங்களே பாலமாக விளங்குகின்றது. அன்றைய காலத்தில் இருந்த வாழ்க்கை முறைகளையும் பழக்க வழக்கங்களையும் சம்ப்ரதாயங்களை தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியே (evolution) சம்ப்ரதாயங்களின் பரிணாம வளர்ச்சி. சமுதாய பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள வேண்டுமானால் நாம் சம்ப்ரதாயங்களின் பொருளையும் அதன் அவசியத்தையும், கால நேரத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும், அதன் கட்டுப்பாட்டையும், அதன் ஸ்திர தன்மையும் (stability)  காட்டும் கால கண்ணாடியே சம்ப்ரதாயங்கள். அர்த்தமுள்ள சம்ப்ரதாயங்களே ஒரு அழகான சமூகத்தின் அடையாளம். சம்ப்ரதாயங்களை ஆராய்ந்து அறிதல் மூலம் ஒரு சமூகம் கடந்து வந்த மாற்றங்களை நம்மால் உணர முடியும்.

ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் “செய்முறை விளக்கங்கள் (SOP) எழுதி வைக்க படாத காலத்தில் இந்த சம்ப்ரதாயங்கள் மூலமே அவை பின் பற்ற பட்டன. எப்படி மரபு அணுக்களில் (Chromosome) நம் பரிணாம வளர்ச்சி (evolution) பதிவு செய்ய பட்டு உள்ளதோ அது போலவே ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியும் சம்ப்ரதாயங்களில் பதிவு செய்யப் பட்டது.

சம்ப்ரதாயங்கள் பற்றி நமக்கு தெளிவு இல்லாமலும் அதன் பொருள் புரியாமலும் இருந்தால் காலம் காலமாக வரும் சமுதாய மாற்றங்களை அறிந்து கொள்ள முடியாது.

பார்வை தொடரும்..............

Sunday 12 January 2014

கடவுளும் மருத்துவரும்



மருத்துவரை கடவுளாக காண்பதில் தவறில்லை. ஆனால் மக்கள் கடவுளை மருத்துவராக எண்ணும் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. நோய் தீர்க்க மக்கள்  மருத்துவரிடம் செல்வது போல் வாழ்வின் குறை தீர்க்க கடவுளிடம் அதிகமாக செல்ல துவங்கி உள்ளனர்.

மருத்துவரிடம் செல்வதற்க்கு நாம் நல்லவரா கெட்டவரா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் கொடுக்கும் பணம் நல்ல வழியில் வந்ததா அல்லது தீய வழியில் வந்ததா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தில் சொல்ல படுகின்ற நல்ல நீதிகளை பின் பற்றி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் தீர்த்து வைக்கும் வியாதிக்கேற்பவும், அவரது திறமைக்கு ஏற்பவும் நாம் அவர்களுக்கு கட்டணம் செலுத்துகின்றோம்.

தன்னிடம் யார் வந்தாலும் அவர்களுடைய நோய் தீர்ப்பது ஒரு மருத்துவரின் கடமை. அதுபோலவே தன்னிடம் வரும் பக்தர்களின் குறைகளை கடவுள் தீர்த்து வைப்பார், இதற்கு கட்டணமாக நாம் காணிக்கை செலுத்தினால் போதும் என்று மக்கள் நம்ப தொடங்கி உள்ளனர்.

கடவுளை நாடும் போது நாம் நல்ல வழியில் நடந்து இருக்க வேண்டும், நம்முடைய பணம் நேர்மையான வழியில் வந்திருக்க வேண்டும், தெரிந்தே குற்றங்களை செய்யாதிருக்க வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை.

கடவுளை வைத்து சொல்லப் பட்ட எந்த நல்ல நெறிகளையும் பின்பற்றாமல், எந்த வித கவலையும், குற்ற உணர்ச்சியும் இன்றி மக்கள் கடவுளிடம் குறை தீர்க்க வேண்டி செல்கின்றனர். இதற்காக எவ்வளவு காணிக்கை வேண்டுமானாலும் செலுத்தவும், எந்த விதமான பரிகாரங்களை செய்யவும், எத்தனை முறை கடவுளை சென்று பார்க்கவும் மக்கள் தயாராக உள்ளனர்.

எப்படி மருத்துவர்கள் நம்முடைய நல்ல நடத்தை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கவலைப்பட உரிமையும், அவசியமும் இல்லையோ, அது போல் கடவுளும் நாம் செய்யும் நன்மை, தீமை, நாம் வாழும் வாழ்க்கை முறை, நாம் சம்பாதிக்கும் பணம் ஆகியவை பற்றி கவலை பட மாட்டார் என்று மக்கள் நம்புகின்றனர். அப்படியே கவலை பட்டாலும், காணிக்கை மற்றும் பரிகாரங்களை செய்து கழித்து விடலாம் என்று நம்புகின்றனர்.

அறியாமல் செய்த தவறுக்கு மனம் வருந்தி, திருந்தியவர்களுக்கு மனம் சமாதானம் அடைய பரிகாரங்கள் ஒரு வழியாக சொல்லப் பட்டு இருக்கலாம். ஆனால், பரிகாரங்களே நம்முடைய அனைத்து குற்றங்களுக்கு தீர்வாகாது.

மருத்துவர்கள் கைராசிக்காரராக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது போல் கடவுளும் தன்னிடம் வரும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் தீர்க்கும் வல்லமை படைத்தவராக இருக்க வேண்டும் என்பதே மக்களின் ஒரே எதிர் பார்ப்பு. கடவுளை வணங்குவதற்க்கும் தம் குறைகளை எடுத்து சொல்லி அதை தீர்ப்பதற்க்கும், தம்மை தொடர்ந்து காப்பதற்க்கும் நாம் எந்த வகையிலும் நல்லவராக இருக்க வேண்டும், நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், எந்த தீய செயலும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற அவசியங்கள் இருப்பதாக மக்கள் கருதவில்லை.

நிறைய பூஜை செய்து, காணிக்கை மற்றும் பரிகாரங்கள் செய்தால் கடவுள் நல்லது செய்து, நம் தவறுகளை மண்ணிப்பார், தண்டிக்க மாட்டார் என்று நம்புகின்றனர். அதிக தவறு செய்யும் போது அதிக காணிக்கை செலுத்த படுகிறது.

கடவுள் ஒரு மருத்துவர் போல நடப்பார் என்ற நம்பிக்கை எப்படி மக்கள் இடையே வளர்ந்தது என்று தெரியவில்லை. கடவுள்கள் மூலம் சொல்ல பட்ட நல்ல நெறிமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும் பின் பற்றினால் மட்டுமே கடவுள் அருள் புரிவார் என்று எல்லா மறை நூல்களிலும் சொல்லப் பட்டு இருக்கிறது. ஆனால் நாம் செய்யும் மாபாதகங்களுக்கு கடவுள் நிச்சயம் தண்டிப்பார் என்ற நம்பிக்கை குறைந்து, செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தீவிர பூஜைகளோ, பரிகாரங்களோ செய்து தண்டனையில் இருந்து தப்பி விடலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே பெருகி வருகிறது.

பெரிய பொது மருத்துவ மனைகளில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் சில நேரம் நல்ல சிகிச்சை கிடைப்பதில்லை. மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் அதிக நேரம் செலுத்த முடிவதில்லை. எனவே அதிருப்தி அடையும் மக்கள் சிறிய அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். அது போலவே அதிக கூட்டம் உள்ள கோவில்களுக்கு சென்று திருப்தி அடையாமல் போவதால் ஊருக்கு ஒரு கோவில் அல்லது தெருவுக்கு ஒரு கோவில் கட்டி கடவுளை அடிக்கடி சென்று பார்க்கின்றனர். இதன் மூலம் கடவுளோடு அதிகம் தொடர்ப்பு ஏற்படும் என்று நம்புகின்றனர். அதிக மருத்துவமனைகள் இருந்தால் அதிக சேவை கிடைக்கும் என்பது போல் அதிக கோவில் இருந்தால் அதிக அளவில் அருள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

காலம் காலமாக அனைத்து மதங்களிலும் சொல்லப்பட்ட நல்ல தத்துவங்கள் படியும், நல்வாழ்க்கை வழி முறைகளையும் அறிந்து கொண்டும், அதன்படி வாழவும் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லை. காணிக்கை, பரிகாரங்கள் மற்றும் அதிக அளவிளான வழி பாடுகள் மூலம் கடவுளை சரி படுத்தினால் தமக்கு அருள் கிடைக்கும் என்று தவறாக ஆனால் தீவிரமாக நம்புகின்றனர்.

எங்கும் பெருகிவிட்ட இந்த வழிமுறைகளுக்கு கடவுள்களிடம் இருந்து எப்படி பதில் கிடைக்க போகிறது என்று காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.